ஒரு ஊர்ல ஒரு துறவி இருந்தார். அவர் ஒவ்வொரு கிராமத்துக்கும் போயி மக்களுக்கு நீதிக்கதைகள், போதனைகள் செஞ்சும் இறை பணியாற்றி வந்தார். அவர் இப்படியே இறைப்பணிக்காக நல்லாம் பட்டி அப்படிங்கற ஊருக்கு வந்தார். அங்கு சுமார் ஒரு மாதம் வரை தங்கி இறைப் பணியாற்றி விட்டு வேறு ஊருக்கு செல்ல தனது மாட்டு வண்டியை தயார் செஞ்சுட்டு இருந்தார். அப்போது அவர் பக்கதில் ஒருவன் வந்து, அவரின் இறைப் பணியில் மிகுந்த ஈடுபாடாகி அவருடனே ஊர் ஊராக வந்து விடுவதாக சொன்னான். இதைக் கேட்டதும் அவனைப்பற்றி அக்கம் பக்கம் விசாரித்த துறவி அவனை அனாதை என அறிந்து அவன் மேல் அனுதாபப்பட்டு அவனையும் சேர்த்துக் கொண்டும், பொருட்களைக் கட்டிக் கொண்டு அடுத்த ஊருக்கு அவர்கள் பயணமானார்.
துறவி வண்டியில் முன்னால் அமர்ந்திருந்தார். அவன் வண்டிக்கு பின்னால் அமர்ந்திருந்தான். துறவி அவனிடம், தம்பி பின்னாடி உட்கார்ந்திருக்க, பொருட்கள் கீழ விழுகுதான்னு பார்த்துட்டே வா'ன்னு சொன்னார். கொஞ்ச தூரம் பயணம் செய்த பின் ஓரிடத்தில இளைப்பாற நிறுத்தினார்கள். அப்போது வண்டியின் பின் பக்கம் வந்த துறவி சில பொருட்களைக் காணாது விக்கித்து நின்றார். அவனிடம் பொருட்கள் எங்கே என கேட்க, அவன் சில பொருட்கள் கீழ விழுந்திருச்சு என சொன்னான். இவர், கீழ விழுந்தா எடுத்து வைத்திருக்க வேண்டியது தானே என துறவி கேட்க, அதற்கு அவன் நீங்க பொருட்கள் விழுகுதான்னு பாக்க தானே சொன்னிங்க என சொன்னான். ஆக, அவன் அவர் சொன்னதை அப்படியே செய்ததாக சொன்னான். துறவி கீழ விழுந்தா பத்திரமாக எடுத்துட்டு வா என்பதை அவன் அப்படி குறுகிய மனப்பான்மையில் எடுத்துக் கொண்டான்.
அடுத்து அவர்கள் பயணத்தை தொடங்கினார்கள். துறவி அவனிடம் எது கீழ விழுந்தாலும் பிடிச்சு எடுத்து வை என சொல்லி அவனை வண்டி ஏற்றினார். சிறிது தூரம் சென்ற பின் ஒரு இடத்தில் இளைப்பாற மறுபடியும் நிறுத்தினார். இறங்கி வண்டிக்கு பின்னால் பார்த்தால் வண்டி பின்பக்கம் முழுதும் மாட்டு சாணமாக இருந்தது. அவன் கையிலும் சாணம் இருந்தது. துறவி, என்ன தம்பி வண்டியில இவ்ளோ சாணி இருக்கு, என்ன விஷயம் என கேட்க, அதற்கு அவன், நீங்க தான ஐயா எது கீழ விழுந்தாலும் எடுத்து வைன்னு சொன்னிங்க அதான் எடுத்து வச்சுட்டு வரேன் என பதில் சொன்னான். அவன் பதில் கேட்டு துறவி அவன் அறியாமையை நினைத்து கவலைப்பட்டார். சொல்வதை அப்படியே அர்த்தம் எடுத்துக் கொள்கிறானே, கொஞ்சம் கூட பகுத்து ஆய்ந்து பொருள் விளங்கி சமயோசித்தமாக செயல்பட மாட்டிங்கறானே என மிகவும் வருத்தமுற்றார். அவன் சிறுபிள்ளைத்தனமான புத்தியை மாற்றி அவனை நல்ல அறிவாளியாக மாற்ற வேண்டும் என அவர் தனக்குள் நினைத்துக் கொண்டு அருகிலிருக்கும் ஊரை நோக்கி பயணமானார் அவனையும் கூட்டிக் கொண்டு....
கற்றுக் கொள்வது:
சொல்கிற சொல்லை அப்படியே அர்த்தம் கொள்ளாமல், அதனை பகுத்து உள்ளர்த்தத்தை அறிந்து அதற்கேற்ப சமயோசித்தமாக செயல்பட வேண்டும். சொன்னதை செஞ்சேன் என்கிற மனப்போக்கை தவிர்த்தால் நிறைய சாதிக்கலாம்.