குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. தாயாவது ஒரு பெண்ணின் குறிக்கோள். அதை அடைய எத்தனையோ மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் சந்தோசமாக, ஒரு தவமாக அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் கணவனும், மனைவியும் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பதில் சரியான முறைகளை கையாள்கிறார்களா? என்றால் பெரும்பாலும் இல்லை என்பதே பதிலாக கிடைக்கும்.
நம் தாய்மார்களுக்கு குழந்தை கொழு கொழு என இருப்பது தான் ஆரோக்கியம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிறந்த முதல் ஆண்டிலேயே குண்டாக வளரும் குழந்தை பெரியவனாகும் போதும் குண்டாக இருப்பதற்கு 80 சதவீதம் வாய்ப்புகள் இருகின்றன. குழந்தைகள் அதிக எடையோடு வளரும் போது அவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்படுகின்றன என்பதைப்பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்வது மிக முக்கியம்.
உடல் எடை அதிகமாவதால் அதிக சோர்வு ஓடி விளையாட சோம்பல், எந்த நேரமும் டி.வி பார்ப்பது அல்லது வீடியோ கேம்ஸ் விளையாடுவது, படிப்பில் அக்கறையின்மை. இவை எல்லாவற்றையும் விட கால் எலும்புகள் வளைந்து போதல் ஆகியவை ஏற்படுகின்றன. ஆனால் இதெல்லாம் விட பெரிய ஆபத்து அவர்களுக்கு சிறுவயதிலேயே 5 வயது முதல் வரும் அதிக ரத்த அழுத்தம். அது போக சர்க்கரை வியாதி (டைப் இரண்டு), பெரியவர்களுக்கு மட்டுமே இந்த இரத்த அழுத்தமும் சர்க்கரை வியாதியும் வரும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தாள் அது முழுக்க முழுக்க தவறு.
குண்டான குழந்தைகளைக் குறி வைத்து தாக்கும் இந்த உயர் இரத்த அழுத்தம் குழந்தைகளுக்கு வந்திருப்பது கூட பெற்றோர்களுக்கு தெரியாது. நவீன சிகிச்சை முறையில் இந்த இரத்த அழுத்த நோயை இப்பொழுது குணப்படுத்தி விடலாம் என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஆனால் உடல் பருமனாக இருக்கும் குழந்தைகளை உடனே மருத்துவரிடம் காட்டி இரத்த அழுத்த நோயும், சர்க்கரை நோயும் இருக்கிறதா? என சோதனை செய்து பார்த்த பின்னர் உடனே சிகிச்சையை தொடங்க வேண்டும் என்பது மிக முக்கியம்.
சரியான எடையுடன் ஆரோக்கியமாகக் குழந்தைகளை வளர்க்க certified children fitness மருத்துவர்களை அணுகி அவர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். உணவு முறைகளையும் உடல் பயிற்சிகளையும் தெரிந்து கொண்டு அவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்தி சரியான ஆரோக்கியமான மனிதனாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.
கவனிக்கப்படாத உயர் இரத்த அழுத்த நோய் குழந்தை இருதய நோயாளியாகவும், சிறுநீரக நோயாளிகளாகவும் மாறிவிடும் வாய்ப்பு அதிகம். வரும் முன் காப்பது சிறந்தது. வந்த பின் வருந்துவது வீண். அதை விரைவில் குணப்படுத்த முயற்சிப்பதே புத்திசாலித்தனம்.
images: google search
-Obesity Doctor-
அஞ்சலி தினம்
தோழர் திரு. ராஜேஷ் (மாயஉலகம் வலைப்பூ) அவர்களின் மறைவை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை சகபதிவர்கள் அனைவரும் பதிவிடாமல், அவரது குடும்பத்தினருக்கு நம் இரங்கலைத் தெரிவித்து ஓரிரு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துவோம். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.